முழுமையான தமிழ் விளக்கத்துடன் ஆங்கில இலக்கணம் கற்போம்

Thursday, August 7, 2008

இலங்கையில் தமிழர் வரலாறு

இலங்கை ஒரு தீவு. அது இரண்டு தேசங்களைக் கொண்டது. ஒன்று தமிழர் தேசம். மற்றையது சிங்களர் தேசம். ஆனால் இலங்கையின் வரலாறு சிங்கள தேசத்தின் வரலாறாக மட்டுமே எழுதப்பட்டு அல்லது சித்தரிக்கப்பட்டு வருகிறது.

தமிழர்கள் இறைமையைப் போர்த்துக்கேயரிடம் இழந்ததிலிருந்து இன்று வரையும் தொடர் அவலங்கள் மட்டுமே எஞ்சி நிற்கிறது.

இலங்கைத்தீவில் போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்தில் இரு இனங்களான சிங்கள இனமும், தமிழினமும் தனித்தனியாக ஆட்சியுரிமை செலுத்தி வந்தன. ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்தில் (1635-1795) தமிழீழ நிலப்பகுதிகளை மரபு வழியாகப் பேணி தமிழர்களுக்கென தனி நிர்வாகத்தையும், சிங்களவருக்கென தனி நிர்வாகத்தையும் ஏற்படுத்திக் கொடுத்தனர்.

கி.பி.1796 இல் பிரித்தானியரின் ஆட்சிக்குள் வந்தன. கி.பி.1619 இல் போர்துக்கேய அரசைச் சென்றடைந்த தமிழீழ இறைமை கி.பி.1658 இல் ஒல்லாந்தரையும், பின்னர் கி.பி.1796 இல் பிரித்தானியரையும் சென்றடைந்து, கி.பி.1833 தொடக்கம் கி.பி.1948 ஆம் ஆண்டு பெப்ரவரி 3 ஆம் நாள் வரை 105 ஆண்டுகளுக்குச் சிங்கள நிலமும், தமிழ் நிலமும் ஒரே ஆட்சி முறையில் தொடர்ந்து வந்தது.

இலங்கையிலிருந்து அகன்ற பிரித்தானியர் ஒற்றையாட்சி முறையின் கீழ் முழுமையான ஆட்சிப் பொறுப்பை சிங்களப் பெரும்பான்மை நாடாளுமன்றத்திடம் ஒப்படைத்தனர். அதுவே அத்தனைக் கேடுகளுக்கும் மூலக்காரணமானது.

தொடக்க காலத்தில் இருந்து தமிழர்களின் உரிமைகள் பறிக்கப்பட்ட நிலையில் அப்போதைய தமிழ்த் தலைமைகள் தமிழரின் உரிமைகளுக்காக அறவழிப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

1958, 1961 இனக்கலவரங்களை ஏற்படுத்தி தமிழர்களின் போராட்டங்களை சிங்களத்தரப்பு நசுக்கியது. மாறிமாறி ஆட்சிக்கு வந்த சிங்கள ஆட்சியாளர்கள் தமிழ் தலைமைகளுடன் உடன்படிக்கைகளை எழுதி நிறைவேற்றாது கிழித்தெறிந்தனர்.

ஏமாந்த தமிழ் தலைமைகள் ஒன்று சேர்ந்து ஒரே தமிழ்த் தலைமை உருவாக்கப்பட்டு 1977 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 21 ஆம் நாள் நடைபெற்ற பொதுத்தேர்தலில், தமிழீழக் கோரிக்கையை முன்வைத்தனர். தமிழ் மக்கள் அனைவரும் அதனையே முழுமையாக ஆதரித்தனர்.

பயங்கரவாத தடைச்சட்டத்தினைக் கொண்டு வந்து தமிழர்கள் கொடூரமாகக் கொன்றொழிக்கப்பட்டனர். சிங்கள அரசு 1983 இல் வரலாறு காணாத பாரிய இனக்கலவரத்தை கட்டவிழ்த்து விட்டது.

அறவழியில் போராடி தமிழர் உரிமைகளை வென்றெடுக்க முடியாது போன தமிழர் போராட்டம், பின்னர் ஆயுதப் போராட்டமாகப் பரிணமித்தது.

இப்போராட்டம், சில சுய இலாபங்களுக்காக குறுகிய அரசியல் நோக்கம் கொண்டவர்களின் இலங்கை அரசின் அடிவருடிக் கொள்கையினால் பல பின்னடைவுகளை சந்தித்தது, சந்தித்தே வருகின்றது. எம்மினத்தின் போரட்டச் சக்தியை சீர்குலைக்கும் நோக்கில் சிங்கள அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைக்களுக்கு ஆயுதக்குழுவாகவும் அரசியல் பகடைக்காய்களாவும் மாறி தமிழர்களின் நலனுக்கு தமிழனே, தமிழினத் துரோகிகளாக உண்மையை பொய்மையாக்கி, பொய்மைக்கு துணைப்போகும் துர்ப்பாக்கிய நிலை தொடர்ந்தது.

இவ்வாறான சூழ்நிலையில் இலங்கைத் தமிழரின் வரலாறும், போராட்டத்தின் நியாயத் தன்மையும் தக்கச் சான்றுகளுடன் வெளிவருவது காலத்தின் தேவையாகியுள்ளது.

இத்தேவையை பூர்த்திச் செய்யும் முகமாக; கலாநிதி முருகர் குணசிங்கம் அவர்கள் பல்வேறு மட்டத்தினரையும் கருத்திற்கொண்டு பல மூல ஆவணங்களின் ஆதாரங்களுடன் ஆய்வுசெய்து உள்ளதை உள்ளவாறே ஒரு வரலாற்று ஆவணத்தை நூலாக எழுதியுள்ளார். இச்செய்தி தமிழர்களை பொருத்தமட்டில் மகிழ்ச்சியானச் செய்தி.

இந்நூல் தமிழிலும் ஆங்கிலத்திலும் தனித்தனியாக பிரசுரிக்கப்பட்டுள்ளது. 600-க்கும் மேற்பட்ட பக்கங்களைக்கொண்ட இந்நூல் 10 அத்தியாயங்களை உள்ளடக்கியது.

இலங்கை, இந்தியா, போர்த்துக்கல், நெதர்லாந்து, பிரித்தானியா, பிரான்சு, சுவிற்சலாந்து, அமெரிக்கா, ஜேர்மனி ஆகிய நாடுகளிலுள்ள பல ஆவணக்காப்பகங்களில் இந்நூலாசிரியர் பல மாதங்களாகத் தேடி எடுக்கப்பட்ட முக்கியமான ஆதாரங்கள் இந்நூலின் ஆய்வுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளன. மேலும் போர்த்துக்கேய ஆவணங்களில் கிடைக்கப்பெற்ற ஆதாரங்கள், டச்சு ஆவணங்களில் கிடைக்கப்பெற்ற ஆதாரங்கள், பிரித்தானிய ஆவணக்காப்பகங்களில் கிடைக்கப்பெற்ற முதல்தர ஆவணங்கள், தொல்லியல் சான்றுகள், கல்வெட்டு ஆதாரங்கள் போன்றவற்றின் ஆதாரங்களுடன் எதுவித பக்கசார்பும் இன்றி உள்ளதை உள்ளவாறே பதிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழர்களின் பாரம்பரிய பிரதேசங்களில்; அமெரிக்கா, பிரித்தானியா, இலங்கை பல்கலைக்கழக தொல்லியலாளர்களால் மேற்கொண்ட அகழ்வாராய்ச்சிகளில் பெறப்பட்ட தொல்லியல் சான்றுகளும், கல்வெட்டுகளும் இந்த ஆய்வின் முக்கிய ஆதாரங்களாக இடம்பெற்றுள்ளன.

இலங்கைத் தமிழர்களின் வரலாற்றையும் போராட்ட நியாயப்பாடுகளையும் அறிய விரும்புவோர் கட்டாயம் பார்க்கவேண்டிய ஒரு நூல். ஒவ்வொரு தமிழனது வீட்டிலும் இருக்க வேண்டிய நூல். எமது அடுத்த தலைமுறைக்கு தமிழனில் வரலாற்று ஆவணமாக கையளிக்க வேண்டிய நூலாகும்.

இந்நூல் குறித்த சில குறிப்புகள்

இங்கேயும் பார்க்கலாம்

பிற்குறிப்பு:

மேற்கூறிய நூலிற்கான மூலதாரங்கள் சேகரிக்கப்பட்ட விதம், பன்னாட்டு ஆய்வுகள் தொடர்பான விளக்கங்கள், வெளிநாட்டு நூலகங்கள், அவணக்காப்பகங்கள் போன்றவற்றில் குவிந்து கிடக்கும் தமிழரின் வரலாற்று குறிப்புகள் குறித்த விபரங்களை அறிந்துக்கொள்ள விரும்புவோர் 2005 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட முருகர் குணசிங்கத்தாரின் "Primary Sources for History of the Sri Lankan Tamils" எனும் நூலை கட்டாயம் வாங்கிப் பார்க்கவும். (தமிழ் ஆங்கிலம் இரண்டு மொழியிலும் ஒரே நூலாக பிரசுரிக்கப்பட்டுள்ளது.